Monday, June 20, 2011

எழுதிக்கொள் இதனை... நான் ஓர் தமிழன்...




('வாக்குமூலம்..' என்ற பாலஸ்தீனக் கவிதையை தழுவி நான் எழுதிய கவிதை இது...)

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
எனது அடையாள அட்டையில் - மட்டுமே
'நான்' என்ற அடையாளம் கொண்டவன்
கோபமா உனக்கு..??

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
எழுதும் எனது பெயரும்
போகவிருக்கும் சவப்பெட்டியும்
தவிர
ஒன்றும் இல்லை எனக்கு
ஆனாலும் - உன்
கருணை கேட்டு இரந்திட மாட்டேன்
உனக்கு முழந்தாளிட்டு பணிந்திடேன்
மாறாக - என்
பாதங்களில் இறந்துபோவேன்..


எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
கல் தோன்றி மண்தோன்றமுன்
தோன்றி
வெயிலும் சோலையும்
பாராட்டிய வீரமண்ணை
சேர்ந்தவன் நான் - என்
மரணங்கள் உன்
வெற்றியை கொன்றே செல்லும்


எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
என் கண்களைப்போலவே
என் தலைமயிரும் கறுப்பு
எனது விலாசம்,
மறுக்கப்பட்ட ஒரு தூாரத்து கிராமத்தில்
நீ கொண்டுவந்த குடியேற்றங்களால்
ஒதுக்கப்பட்ட குப்பைமேடு அது
அதன் தெருக்களுக்கு பெயரில்லை
வாழ்வுகளுக்கு நாதியில்லை
அங்கே வந்தென்னை கேள்
நான் என்று நாம் வருவோம்


எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
எனது நிலத்தை திருடினாய்
நீ
எனது சகோதரிகளை சூறையாடினாய்
நீ
எனது குழந்தைகளை கொன்றாய்
நீ
நீ  விட்டுவைத்தது இந்த
வனாந்திரம் மட்டுமே...

இவை அனைத்துக்கும் மேல்
இதனையும் எழுது - நான்
யாரையும் வெறுப்பவன் அல்ல
யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல

ஆனாலும்- நீ
கவனம்
முடிவுகள் என்றுமே நிலையற்றது...

-மோனி..


2 comments:

  1. கலக்கல் கலக்கல்

    ReplyDelete
  2. உணர்ச்சி பிளம்பு ...கவிதை அருமை நண்பா ...

    ReplyDelete