Sunday, March 6, 2011

காதல் கடிதம்...




அன்புள்ள காதலிக்கு,

கண்ணீரால் இதை எழுதவில்லை
உதிரத்தால் நிறத் தீட்டவில்லை
உணர்வுகள் கொண்டு நிரப்பவில்லை
வலியால் துவண்டு கரையவில்லை

இது வெறும் கடிதம்
இதில் என்ன தெரியப் போகிறது

வார்த்தைகளில் தெரிவதில்லை அம்மா
உள்ளங்களின் ஆழம்
மெளனத்தில் கூட புரிந்துவிடுமடி
உண்மைக் காதல்

உன்னை மறந்து போகவுமில்லை
அல்ல - நினைத்தே
உருகிப் போகவும் மாட்டேன்

நிழலாய் மாறுமுன்
நினைவுகளின் - வாசலினின்று
அழுது உருகுகிறேனென்று
பொய் சொல்லவுமில்லை

இது வெறும் கடிதம்
இதில் என்ன தெரியப் போகிறது

கடிதங்கள்
துாரங்களின் அடையாளங்கள்
நேசங்களின் அலங்காரங்கள்
"என்றும் என்னோடு இருக்கும்
உனக்கு எது இதற்கு?"  என்று
கவிதையில் பொய்யும்
சொல்லப் போவதில்லை

சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
உன்னைத்தான் காணவில்லையே

நீ என்னுள் தந்த காயங்களை
இரசிக்கிறேன்
நிரப்பி வழித்த சோகங்களை
நேசிக்கிறேன் - என்று
வைரமுத்துவாய் காசிற்கு
புழுகவும் மாட்டேன்

நீ இல்லையென்றால் செத்துவிடுவேனென்று
முட்டாளாய்
உன் நினைவுகளில் வாடி மடியும்
பித்தனாய்
நிச்சயமாய் வாழமாட்டேன்

திரும்பும் இடமெல்லாம்
உன் நினைவுதான் என்று
பிதற்றவும் மாட்டேன்

உன்னை இழந்த சோகத்தில்
தாடியும் கையில் சாடியுமாய்
உன் மேல் சத்தியமாய் போகமாட்டேன்

சாதிக்க இலட்சியங்கள்
நூறு உண்டு எனக்கு

இது வெறும் கடிதம்
இதில் என்ன தெரியப் போகிறது

என்னதான் சொல்லவருகிறான்
இவன் என்கிறாயா..??
நீ நெஞ்சில் பூத்துவிட்டாய்
இனி அது உதிராது

நான் கடந்து போகிறேன்
உ்ன் மேல் கொண்ட காதலுடன்

என்னோடு வருவதும்
இல்லை போவதும்
உன்னோடுதான்

அன்புடன்.
காதலன்

இது வெறும் கடிதம்
இதில் என்ன தெரியப் போகிறது

-மோனி...

No comments:

Post a Comment